
பொருள்களின் விலையேற்றத்தால் வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் சிக்கித் தவிக்கும் வசதி குறைந்த மக்களின் துயரைப் போக்க அரசின் நடவடிக்கைதான் என்னவென சிலாங்கூர் மந்திரி பெசாரின் இந்தியர் பிரநிதிநிதியும், செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கோத்தா ராஜா கெ அடிலான் தலைவருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பணவீக்கத்தை எதிர்கொள்ள காலம் கடந்து அமைக்கப்பட்ட ஜிஹாட் எனும் பணிக் குழுவினால் பலனேதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 1ஆம் தேதி முதல் போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை அகற்றியதால் பி40, எம்40 பிரிவு மக்கள் பெரும் சுமையை அனுபவிக்க நேரிடும். மேலும், மக்களின் விருப்ப உணவாக இருக்கும் கோழியின் உச்சவரம்பு விலை 9.40 ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டது நிச்சயம் எதிர்வினையை உருவாக்கும்.
இந்நிலையில் நாட்டின் பணவீக்கம் 4.1 விழுக்காடாக அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது கவலையை ஏற்படுத்துகிறது.
எனவே, விலைவாசி, பண வீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, அரசு தீர்க்கமான வியூகங்களை எடுத்து மக்கள் படும் துன்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென டாக்டர் குணராஜ் அறைகூவல் விடுத்தார்.
