
இலங்கையில் இருந்து வந்த பயணியிடம் விலை உயர்ந்த கற்கள் பறிமுதல். கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை. சென்னை விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது குறித்து விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகீம் (வயது 30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ. 59 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 4 லட்சத்தி 86 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினார். இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த தங்கராஜா (37) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்த ரூ. 23 லட்சத்தி 13 ஆயிரம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலையுர்ந்த கற்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இந்த அதிரடி சோதனை மூலம் மொத்தம் ரூ. 87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், விலையுர்ந்த கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
