
பக்காத்தான் ஹராப்பான் தமது கட்சியான மலேசிய இந்தியர் மேம்பாட்டுக் கட்சிக்கு தொகுதிகளை வழங்காததால், தாம் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் பி. வேதமூர்த்தி கூறியிருப்பது வேடிக்கையான ஒன்று என செந்தோசா சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தமது மனுவை முறையாக பக்காத்தான் தலைமைத்துவத்திற்கு அனுப்பினாரா என்பது கேள்விக் குறியாக உள்ளதாக டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஆட்சி காலத்தில் வேதமூர்த்தி ஒற்றுமைத் துறை அமைச்சராக இருந்த 22 மாதங்களில் அவர் தமது பொறுப்புகளை முறையாக ஆற்றினாரா, இந்திய சமூகத்திற்கு என்ன செய்தார் என்பதை அவர் விளக்க வேண்டுமென டாக்டர் குணராஜ் கேள்வி எழுப்பினார்.
அவர் முதலில் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவைத் தெரிவித்த பின்னர், அமைச்சர் பதவியை அளித்த துன் மகாதீருக்கும் அன்வாருக்கும் விசுவாசத்தைக் காட்டி, இப்போது தேசிய முன்னணிக்கு ஆதரவு என்று பிதற்றுவதாக டாக்டர் குணராஜ் குற்றம் சாட்டினார்.
