28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

அபலை மாணவிக்கு அபாண்ட தண்டனை
மலேசிய இந்து சங்கம் கண்டனம்

கோலாலம்பூர், நவ.03:
பட்டர் வொர்த், தாசேக் குளுகோர் கம்போங் செலாமாட் தேசிய இடைநிலைப் பள்ளியில் முதலாம் படிவ 13 வயது மாணவி ஒருவர், தவறான காலணியை அணிந்து வந்ததற்காக அந்த மாணவியை மாணவர் ஒன்றுகூடலின்போது கரடுமுரடான தரையில் முழங்காலிட வைத்ததுடன், கைகளையும் உயர்த்தச் சொல்லி தண்டனை கொடுத்த ஒரு மூத்த ஆசிரியை, அந்த ஏழை மாணவிமீது சமய ரிதியாகவும் இந்துக்களின் பண்பாட்டுக் கூறுகள்மீதும் தாக்குதல் தொடுத்துள்ளதற்கு மலேசிய இந்து சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.

அப்பாவால் காலணி வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்று தன் பிஞ்சு உள்ளத்தை மறைக்கத் தெரியாமல் அப்படியே திறந்து காட்டிய அந்த ஏழை மாணவிமீது நெஞ்சில் ஈரமில்லாத ஒரு மூத்த ஆசிரியர் மூர்க்கத்தனம் புரிந்துள்ளார்.

பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பெற்றோரைப் போலவும் நடந்து கொள்ள வேண்டும். தேர்வில் புள்ளிகளைப் பெறுவதற்கான கல்வியை மட்டும் போதிப்பது ஆசிரியர்தம் பணி இல்லை. கனிவும் பரிவும் கொண்டு ஆதரிக்கும் பெற்றோரைப் போல அரவணைக்கும் பண்பு நலனும் வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் நாட்டில் அப்படித்தால் செயல்படுகின்றனர்.

வணக்கத்திற்குரிய அத்தகைய ஆசிரியப் பெருமக்களால்தான், நாளைய சமுதாயத்தின் தலைவர்கள் பள்ளியில் உருவாக்கப்படுகிறனர். ஆனால், மனதில் அன்பையும் பொதுவான பண்பு நிலையையும் தொலைத்துவிட்ட ஒரு மூத்த ஆசிரியை காலணிக்கான தண்டனையை பொதுவெளியில் கொடுத்ததுடன் மனம் ஆறாமல், அந்த இந்து மாணவி கையில் கட்டி இருந்த சாமிக் கயிற்றையும் வெட்டச் சொல்லி இருக்கிறார்.

இந்துப் பெண்கள் தம் நெற்றியில் திலகம் இடுவதும் திருநீறு அணிவதும் வழக்கம். அந்த வகையில் சம்பந்தப்பட்ட முதலாம் படிவ மாணவி அணிந்திருந்த கருப்புப் பொட்டையை அகற்றச் சொல்லி இருக்கிறார்.

இதனால், மிரண்டுபோன அந்த மாணவி பள்ளி செல்லவே அச்சம் தெரிவித்திருப்பதுடன், இதன் தொடர்பில் தாசேக் குளுகோர் காவல் நிலையத்தில் புகாரும் செய்யப்பட்டுள்ளது.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலத் தலைவர் மோகன், தேசியப் பொருளாளர் முனியாண்டி மற்றொரு பொறுப்பாளர் முனீஸ்வரன் உள்ளிட்டவர்கள் இதன் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் பாராட்டும் அதேவேளை, சம்பந்தப்பட்ட ஆசிரியைமீது கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள பினாங்கு மாநில முதல்வர் சௌ கான் இயூ, துணை முதல்வரும் மாநில கல்விக் குழு தலைவருமான பேராசிரியர் பி.இராமசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இதன் தொடர்பில் தங்க. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles