
அமாட் ஸாஹிட் ஹமிடியை பிரதமராக்கவும் அம்னோ தலைவர்களின் வழக்குகளை ரத்து செய்யவும் வலியுறுத்தும் அதிகாரப்பூர்வ கடிதம் பரவலாகப் பகிரப்பட்டு வருவது அம்னோவுக்கு இப்போது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஒப்பந்த வாக்குறுதிக் கடிதம் அம்னோவின் கடிதத் தாளில் தயாரிக்கப்பட்டு, ஸாஹிட் ஹமிடி, செயலாளர் அமாட் மஸ்லான் ஆகியோர் கையெழுத்திட்டு லெங்கோங் தொகுதி வேட்பாளர் Shamsul Anuar Nasara (ஷம்சுல் அனுவார் நசாராவிற்கு) முகவரி இடப்பட்டுள்ளது.
மேலும், அக்கடிதத்தில் தேசிய முன்னணி தேர்தலில் தோல்வி அடையும் பட்சத்தில், மற்ற கட்சிகளோடு கூட்டு அரசாங்கத்தை அமைக்கவும், அமைச்சரவைப் பட்டியலை வெளியிடவும், பொதுத்துறை நிறுவனங்களில் பொறுப்பாளர்களை நியமிக்கவும் ஸாஹிட்டிற்கு ஆதரிவளிக்க வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதனையடுத்து, புதிய அரசாங்கம் அம்னோ தலைவர்களின் நீதிமன்ற வழக்குகளை ரத்து செய்ய நெருக்குதல் கொடுக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறுவோர், அமைச்சரவையிலிருந்து விலக்க அதிகாரம் தர வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் போலியானது என்றும் அது அம்னோவையும் ஸாஹிட் ஹமிடியையும் களங்கப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அம்னோ தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



