
பாகிஸ்தான் அரசாங்கத்தின் பழி வாங்கும் நடவடிக்கைக்குப் பயந்து மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்த அந்நாட்டு பத்திரிகையாளர் Syed Fawad Ali Shah சையெட் ஃபாவாட் அலி ஷா கடந்த ஆகஸ்டு 23ஆம் தேதியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
பல இடங்களில் அவரைத் தேடிக் களைத்துப் போன அவரது மனைவி Syeda (சையிடா), அதனால் தாம் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிப்படைந்ததோடு, தமக்கு கருக்கலைப்பும் ஏற்பட்டதாகவும், தாம் மிகவும் நலிவுற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, தமது கணவரைத் தேடிக் கண்டுபிடிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிமும் அரசு சாரா இயக்கங்களும் உதவ வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானில் நடந்த ஊழல்களை பல்வேறு சமயங்களில் பத்திரிகையாளர் சையெட் வெளிச்சம் போட்டுக் காட்டியதால், அந்நாட்டின் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



