
🔊To listen to this news in Tamil, Please select the text.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸ்ஸா அன்வார் பொருளாதார, நிதி விவகார மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டது சரியான முன்மாதிரியான செயல் இல்லையென்று ஊழலையும் அணுக்கமானவர்களுக்குச் சலுகை காட்டுவதையும் எதிர்க்கும் அமைப்பான சி4இன் துணைச் செயல்முறை அதிகாரி சுதாகரன் குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் பொருளாதார விவகார அமைச்சர் ஒருவர் இருக்கும்போது, ஆலோகசரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்றும் அப்பதவி தேவையற்ற ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலோசகர் பதவிக்குச் சிறந்த, அனுபவமிக்க ஒருவர் தேவை என்றிருக்கும் நிலையில், அப்பதவிக்குத் தேர்வு வைக்கப்பட்டு, சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதே அறிவுடைமையாகும்.
அன்வாரின் இந்த நடைமுறையைப் பின்பற்றி ஒவ்வோர் அமைச்சரும் தங்களுக்கென ஓர் ஆலோகரை நியமித்துக் கொண்டால், அதனை பிரதமர் தடுக்க முடியுமா என்றும் சுதாகரன் கேள்வி எழுப்பினார்.
அரசியல் நியமனங்களுக்கு வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் அரசின் பதவிகளுக்கு அனுபவமிக்க நிபுணர்களையே நியமிப்பது சாலச் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்றும் சுதாகரன் குறிப்பிட்டார்.
