
🔊To listen to this news in Tamil, Please select the text.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 130,000 மக்களுக்கு உதவும் வகையில், மாதமொன்றுக்கு 2,000லிருந்து 2,500 ரிங்கிட் வரை அவர்கள் வருமானம் ஈட்ட மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு 75 கோடி ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க 6,400 கோடியில் இருந்து பெரும் பகுதி 2,500 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் பெறும் குடும்பங்களுக்குத் தலா 2,500 ரிங்கிட்டும், கூடுதலாக 600 ரிங்கிட் மதிப்பிலான உணவுக் கூடையும் வழங்கப்படும்.
எம்40 பிரிவில் 35,000லிருந்து 100,000 வரை வருமானம் பெறும் 24 லட்சம் பேரின் வருமான வரி விகிதம் 2 விழுக்காடு குறைக்கப்படும்.
18லிருந்து 20 வயது வரையிலான 20 லட்சம் இளைஞர்கள் ரொக்க நிதியுதவியாகத் தலா 200 ரிங்கிட் பெறுவர். அத்திட்டத்திற்கு அரசு 40 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
விளையாட்டு அமைச்சு இவ்வாண்டு 39.9 கோடி ரிங்கிட் நிதியைப் பெறும் என்றும் அதில் 32.4 கோடி ரிங்கிட் விளையாட்டுப் பயிற்சித் திட்டங்களுக்குச் செலவிடப்படும்.
டிஜிட்டல் சினிமா படம் தயாரிக்க 10.2 கோடியும் கல்வித் துறைக்கு 5,520 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டதோடு 7 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு 77.7 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளிகளை ஊக்குவிக்க 240,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 10.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த 380 பள்ளிகளைப் பழுது பார்க்கவும் 400 அரசு கிளினிக்குகளைச் சீரமைக்கவும் நிதி ஒதுக்கப்படும் என அன்வார் உறுதி கூறினார்.
சுகாதாரத் துறைக்கு 3,630 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, 1,500 மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், மருந்தியலாளர்களை நியமிக்க 300 கோடி ரிங்கிட்செலவிடப்படும்.



