
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் சுங்கை வே வட்டாரத்தில் வாழ்கின்ற இந்துப் பெருமக்களுக்கு மிகவும் பரிச்சயமான அருள்மிகு சக்தி ஈஸ்வரி அம்மன் ஆலய ராஜ கோபுரத்தில் இடம்பெற்றுள்ள ரஜனிகாந்த், கமலஹாசன், நயன்தாரா ஆகியோரின் சிலைகள் விரைவில் அகற்றப்படும் என்று ஆலயத் தலைவர் பரமசிவம் உறுதி அளித்துள்ளதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம் எழுப்பியபோது, பணியாற்றிய சிற்பிகள் ஆலய நிருவாகத்திற்குத் தெரியாமல் இந்தத் தவற்றை செய்திருப்பதாகவும் இதுகுறித்து இப்பொழுதுதான் தெரியவந்துள்ளதாகவும் உடனே இதை அகற்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் மலேசிய இந்து சங்கத்திடம் தெரிவித்துள்ள அதேவேளை, நடந்த தவறுக்கு மலேசிய இந்து சமுதாயத்திடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தை நம் சமய அன்பர்கள் இன்னும் பெரிதுபடுத்தாமல் இத்துடன் நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் அதேவேளை, இது குறித்து சமூக ஊடகங்களில இனியும் பகிர வேண்டாம் என்று இந்து சங்க தேசியப் பேரவையின் சார்பில் கேட்டுக் கொள்வதாக தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
