
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியாவில் வாழ்கின்ற இந்து சமுதாய மக்களில், ஏழைகளையும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அணுகி, அவர்களுக்கு உதவுவதைப் போல பாசங்கு செய்து தங்கள் மதத்திற்கு மாற்றும் போக்கிரித் தனத்தை மலேசிய இந்து சங்கம் இனியும் பொறுத்துக் கொள்ளாது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு விடுதலை அடைவதற்குமுன் அன்றைய மலாயாவிலிருந்து இன்றைய நவீன மலேசியாவரை நலிந்த மக்களுக்கு தூண்டில் போடும் கீழ்த்தரமான மாற்றுமதக் கும்பல்கள் அவ்வப்பொழுது அங்கங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இதற்கு பரந்த அளவில் பலியாவது இந்து சமுதாயம்தான்.
ஒவ்வொரு மனிதரும் அவரவர் விரும்புகின்ற அல்லது பாரம்பரிய வழக்கப்படி தங்களுக்கு இசைவான ஆன்மிகப் பாதையில் பயணம் செய்ய முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு. ஆனால், ஒருவர் நலிந்த நிலையில் இருக்கிறார்; அல்லது ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்பதற்காக அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மதத்தின் பக்கம் வளைப்பதும் இழுப்பதும் மதப் போக்கிரித்தனம்.
குறிப்பாக, சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கிறோம், டியூசன் வகுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் இளம் மாணவர்களை, சிறு வாகனங்களிலும் பேருந்துகளிலும் அழைத்துச் சென்று அவர்களின் பிஞ்சு மனதில் மதநஞ்சைக் கலந்து, தங்கள் மதத்திற்கு மாற்ற முயல்கின்றனர்.
இப்படிப்பட்ட கும்பல், நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளையும் கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டால் பாதிக்கப்பட்ட சிறார்களையும் அணுகி, அவர்களுக்கு உணவுப் பொட்டலம், பள்ளிப் பை, சீருடை வழங்குவது, பேருந்து கட்டணம் கொடுப்பது என்றெல்லாம் தந்திரமாக ஆசைகாட்டி வளைத்து, பின்னர் தங்களின் மதத்தில் சேர்க்கப் பார்க்கின்றனர்.
இத்தகையக் கீழான கும்பல், தங்களின் மதத்தை குறுக்கு வழியில் வளர்க்க வேண்டுமென்றால், அதற்காக இந்துத் தாய்மார் பெற்றுவிட்ட பிள்ளைகள் இலக்காக வேண்டுமா?
இனியும் இத்தகைய நடவடிக்கை நாட்டில் எந்த மூலையில் நடைபெற்றாலும் அதற்கான கடும் நடவடிக்கையை மலேசிய இந்து சங்கம் உரிய முறையில் மேற்கொள்ளும்.
இதன் தொடர்பில் நடமாடும் பணிப்படையை மலேசிய இந்து சங்கம் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்க இருக்கிறது என்றும் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ‘சங்கபூஷன்-ஸ்ரீகாசி’ தங்க. கணேசன் தெரிவித்துள்ளார்.
