
🔊To listen to this news in Tamil, Please select the text.
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள சிக்விஜோர் மாகாணத்திலிருந்து போஹோல் மாகாணத்திற்கு M/V Esperanza Star என்ற பெயர் கொண்ட படகு 120 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அதிகாலையில் படகில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர்.

மீட்புப்பணியில் கடலோர காவல்படை
இதையடுத்து தகவலறிந்து வந்த கடலோர காவல்படையினர் தீயை அணைத்து படகில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். படகில் இருந்து எத்தனை பேர் மீட்கப்பட்டனர்? உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்து விபரம் இதுவரை வெளியாகவில்லை.
பிலிப்பைன்ஸை பொறுத்தவரை அங்குள்ள தீவுகளில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், மோசமாக பராமரிக்கப்படும் படகுகள், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கவனக்குறைவாக அமல்படுத்துதல் போன்றவை காரணமாக அடிக்கடி கடல் விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் நடந்த இதேபோன்ற சம்பவத்தில், 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நள்ளிரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்தது. தீயிலிருந்து தப்பிக்க படகிலிருந்து பலர் கடலில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை.
அதேபோல், கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டோனா பாஸ் என்ற கப்பல் எரிபொருள் டேங்கருடன் மோதியதே மிகப்பெரிய கடல் விபத்தாக உள்ளது. இதில் 4,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
