
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
ஷா ஆலம், அக்.03:
அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி தொடர்புடையதாக கூறப்படும் திடல், உண்மையில் அப்பள்ளிக்கு சொந்தமான நிலம் அல்ல என்று சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.
திட்ட அனுமதி-Kebenaran Merancang வரையறையின்படி, அம்பர் தெனாங் தமிழ்பள்ளிக்கு அருகில் உள்ள நிலம், பொது விளையாட்டுத் திடல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், சம்பந்தப்பட்ட நிலம் பள்ளிக்கு சொந்தமான திடல் என்று தவறான தகவலைத் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் அம்பர் தெனாங் தமிழ்பள்ளிக்கு 2.9 ஏக்கர் நிலம் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் முயற்சியில் அது 3.1 ஏக்கராக அதிகரித்துக் கொடுக்கப்பட்டது. மேலும் டிங்கில் வட்டார திட்ட அனுமதி வரைறையின்படி, பள்ளிக்கு அருகில் இருக்கும் 1.3 ஏக்கர் திடலை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வீ.கணபதிராவ் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அந்த நிலைத்தைதான், பள்ளிக்குரிய திடல் என்று பள்ளி நிர்வாகம் தற்பொழுது கோருகிறது. அந்தத் திடல், சுற்று வட்டார பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரியது ஆகும்.
குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப்-பட்ட காலக்கட்டத்தில், அம்பர் தெனாங்கில் வசிக்கும் தோட்டப்புற குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஏறக்குறைய 50 மாணவர்கள் பயிலும் அப்பள்ளி அமைந்துள்ள 3.1 ஏக்கர் நிலம், வீ.கணபதிராவ் முயற்சியால் நில அரசிதழ்-Land Gazatteஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது பள்ளி நிர்வாகம் கோரும் திடல் பொது மக்களுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அத்திடல் அங்கு வாழும் தோட்ட மற்றும் பொதுமக்களுக்காக நிலைநிறுத்தப்படும். மாணவர்களின் பயன்பாட்டிற்காக, அம்பர் தெனாங் தமிழ்ப்பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே திடல் இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் இந்த விவகாரம் தொடர்பில் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
