
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.16:
காஜாங் சிறைச்சாலையின் துணை இயக்குநர் கா. அண்ணாதுரை இயற்றிய ‘தனியொருவன் நினைத்து விட்டால்..’ என்னும் நூல், நேற்று அக்டோபர் 15-இல் காஜாங் சிறைத் துறை தலைமையக அரங்கத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்வழி, அந்த அரங்கத்தில் முதன்முறையாக தமிழ் ஒளித்தது பெருமைக்குரியது. முன்னதாக, இதே நிகழ்ச்சி தொடர்பில் அக்டோபர் 7-ஆம் நாள் இதே மண்டகத்தில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டம்தான் முதல் தமிழ் நிகழ்ச்சி எனவும் வகைப்படுத்தலாம்.
சிறைவாசம் அனுபவிக்கும் பல்லாயிர இந்தியர்களின் மனவோட்டம், கல்வித் தகுதி, குடும்பச் சூழல் உள்ளிட்ட தகவல்களை ஆய்வுசெய்தும், சிறைவாசம் முடிந்து சமூக வீதியில் வலம் வரும்போது அவர்களை சம்பந்தவர்களின் குடும்பமும் சமுதாயமும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தும் தொலைநோக்குப் பார்வை-சமூக அக்கறையுடன் ஏராளமான கருத்தையும் தகவலையும் பொதியவைத்து, அண்ணாதுரை இந்த நூலை எழுதியுள்ளார்.

இந்த நூலுக்கான அச்சுச் செல்வை ஏற்றுக் கொண்ட ம.இ.கா. தலைமைக்கு நன்றி தெரிவித்த அவர், இன்னும் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள இந்திய சிறைக் கைதிகளைப் பற்றி மேலும் ஆய்வுசெய்ய சிறைத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர்டின் பின் முகமட் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் இதற்குத் தேவையான உதவிக்கும் ம.இ.கா. ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று நூலாசிரியர் என்னும் வகையில் உரையாற்றியபோது அண்ணாதுரை கேட்டுக்கொண்டார்.

சமுதாய அக்கறையும் இளைய சமுதாயத்தின்பால் ஈடுபாடும் கொண்டுள்ள அண்ணாதுரை வெளிப்படுத்திய கருத்தின்வழி, அவருடைய 34 ஆண்டு பணி அனுபவம் தெரிகிறது.
இந்த நூல் விற்பனைவழி கிடைக்கும் நிதி, மலேசிய வேதாத்திரி மனவளக்கலை அறக்கட்டளையின் ஆதரவோடு அடுத்த ஆண்டில் நெகிரி செம்பிலான் லிங்கியில் தொடங்கப்பட இருக்கும் முன்னாள் சிறைவாசியர் மறுவாழ்வு இல்லத்திற்கு வழங்கப்படும் என்று அண்ணாதுரை காளிமுத்து மேலும் தெரிவித்தார்.
தனி ஒருவன் நினைத்து விட்டால் நூல் அச்சிடலுக்கு உதவியதைப் போல, அவரின் எதிர்கால சேவைக்கும் ம.இ.கா. துணை நிற்கும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேசுவரன் இந்த நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றியபோது குறிப்பிட்டார்.

மலேசியாவில் இந்தியரின் மக்கள் தொகைவிட சிறைச்சாலைகளில் உள்ள இந்தியரின் எண்ணிக்கை அதிக விழுக்காட்டில் இருப்பதாகவும், சிறைத்துறை துணை ஆணையர் கா.அண்ணாதுரை மேற்கொள்ளும் முயற்சி, சிறைவாசிகளை சிந்திக்கச் செய்யும் என்றும் புதிய குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கும் எனவும் ம.இ.கா. துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு.சரவணன் பேசினார்.
மாந்தநேய திராவிடக் கழகத் தலைவர் நாக.பஞ்சு, செயலாளர் ச.அன்பரசன், மதியுரைஞர் இர்ரெ.சு.முத்தையா உள்ளிட்டவர்களும் இதில் கலந்து சிறப்பித்து, ஆதரவு நல்கினர்.
இந்த நூலுக்கு இணைப் பேராசிரியர் டாக்டர் முகமது ரஹீம் கமலுதீன் ஆய்வுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, அரங்குகொள்ளா அளவிற்குத் திரண்ட அனைவருக்கும் துளசிக் கன்றுகள் வழங்கப்பட்டன.
