
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஏப்ரல் 03:
மலேசியக் கூட்டரசு அரசியல் சாசனம் வழங்கியுள்ள சமய உரிமைக்காகக் குரல் கொடுக்க புத்ராஜெயாவில் அணிதிரண்ட மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், இந்து தர்ம மாமன்றத் தலைவர் அ.இராதாகிருஷ்ணன், சமய-சமூகவாதி சசி உள்ளிட்டவர்கள் புத்ராஜெயாவில் அணிதிரண்டதுடன் தேசிய சட்டத்துறை அலுவலகத்தில் மகஜர் வழங்கி முழக்கமிட்டுள்ளனர். இத்தகைய சம்பவம் வரலாற்றில் முதல் முறை என்று தெரிவித்துள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி, அவர்களுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.
2005, 2006, 2007 காலக் கட்டத்தில் ஏராளமான ஆலயங்கள் பாதிப்பை எதிர்கொண்டன. அப்பொழுது ஹிண்ட்ராஃப் களத்தில் நின்றபொழுதுகூட, சமய உரிமைக்காக சமய அமைப்புகளின் தலைவர்கள் முன்வந்ததில்லை. வட்டார அளவிலளான தலைவர்கள் மட்டும் அதுவும் தன்னெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.

இப்பொழுது, வழக்கத்திற்கு மாறாக சமய அமைப்புகளின் தேசியப் பொறுப்பாளர்களே சமய உரிமைக்காக களத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது. பன்னாட்டு மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சசிகுமார் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு, இந்திய-இந்து சமுதாயத்தின் ஆதரவு தேசிய அளவில் பிரதிபலித்தது.
இதில், கிள்ளான் எம்பி கணபதிராவும் கலந்து கொண்டது பாராட்டிற்குரியது. இந்திய சமுதாயத்தின் மற்ற மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
எது எவ்வாறாயினும், நம் சமய உரிமைக்காக நாட்டின் சட்டத் துறை அலுவலகத்திற்குமுன் உரிமை முழக்கமிட்ட தங்க கணேசன் உள்ளிட்ட சமயத் தலைவர்களையும் கணபதிராவையும் மற்றவர்களையும் பாராட்டுவதாக ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
