
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா, ஏப்.18:
விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டுள்ள இந்திய இளைஞர்களுக்-கான வாய்ப்பு அண்மைக் காலத்தில் அடியோடு புறக்கணிக்கப் படுவதாகத் தெரிகிறது. ஆரம்ப பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்-கான வாய்ப்பு இவ்வாறு புறக்கணிக்கப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
அதைப்போல சுக்மா போன்ற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, தற்காப்புக் கலையும் விழிப்புணர்வும் இணைந்த சிலம்பம் போன்ற விளையாட்டுகள் தவிர்க்கப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

மத்தியக் கூட்டரசில் மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து, மஇகா இருந்தவரை இந்திய இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஒருங்கிணைக்கும் பணியை மலேசிய இந்தியர்களின் தாய் அரசியல் இயக்கமான மஇகா மேற்கொண்டு வந்தது. தற்போதைய மடானி அரசாங்கத்தில் மஇகா எந்த வகையிலும் தொடர்பு இல்லாமல் இருப்பதால், அந்த அரசியல் பேரியக்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்தியர்களைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் ஒருவரும் இல்லாத நிலையில், இந்த ஆதங்கத்தை அரசாங்கத்தின் கவனத்திற்கு நேரில் கொண்டு செல்லவும் வாய்ப்பில்லை.
இந்த நிலையை சீர்செய்து, மலேசிய இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்படி மத்திய அரசையும் பிரதமரையும் கேட்டுக் கொள்வதாக மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றத்தின் உறுப்பினருமான ஸ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



