
பிரதமர் அன்வார் இப்ராகிம், அனைத்து இனங்களுக்கும் தாம்தான் பாதுகாவலன் என்பதைப் போல எப்போதும் கூறிவருகிறார். இப்போது SPM தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் சூழலில், நலிந்த இந்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக, அவர் குறைந்தபட்சம் 2500 மெட்ரிகுலேஷன் இடங்களை ஒதுக்குவாரா என்பதை அறிய விரும்புவதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தகவல் பிரிவுத் தலைவர் கார்த்திகேசன் சண்முகம் தெரிவித்துள்ளார்.
எஸ்பிஎம் தேர்வுக்குப் பின் 6-ஆம் படிவம் அல்லது எஸ்டிபிஎம் கல்வியில், மலாய் அல்லாத மாணவர்களுடன் போட்டியிட முடியாத மலாய் மாணவர்களுக்காக குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த வசதி-வாய்ப்பில்லாத மலாய் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் மெட்ரிகுலேஷன் கல்வி எனபது அனைவரும் அறிந்ததுதான். அதைப்போலவே, பெரும்பான்மையான மலேசிய இந்தியர்களும் சமூகத்தின் அடித்தட்டு நிலையில் வாழும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்பதும் அத்தகைய குடும்பங்களின் பிள்ளைகளும் எஸ்டிபிஎம் கல்வியை எதிர்கொள்ள முடியாதவர்களாகவும் டியூசன் வகுப்புகளுக்கு செல்வதற்கு வசதியற்ற நிலையில் உள்ளனர் என்பதும் இரகசியமல்ல.
எனவே, குறைந்த வருமானம் கொண்ட 2,200 இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் நஜிப்பால் முன்னெடுக்கப்பட்ட மெட்ரிகுலேஷன் வாய்ப்பு தொடர வேண்டும் என்று கருதும் அதேவேளை, எல்லா இனங்களுக்கும் தன்னை இரட்கராகக் காட்டிக் கொள்ளும் பிரதமர் அன்வார், நலிந்த இந்தியக் குடும்பங்களின் பிள்ளைகள் பயன்பெறும் வகையில் 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை வழங்க முன்வருவாரா என்றும் ச. கார்த்திகேசன் வினவி உள்ளார்.
இது வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடாமல், அதை அமல்படுத்தும் வகையில் பிரதமர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் எம்ஏபி சார்பில் கேட்டுக் கொள்வதாக வழக்கறிஞருமான ச.கார்த்திகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
🔊To listen to this news in Tamil, Please select the text.
