
🔊To listen to this news in Tamil, Please select the text.
வங்காள தேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வருமாறு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குரல் எழுப்பியுள்ளதற்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் இந்தியப் பிரதிநிதித் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நன்றி தெரிவித்துள்ளார். வங்காளதேச அரசாங்கத்தின் இடைக்கால ஆலோசகர் டாக்டர் முகமட் யூனுஸ், வங்காள தேசத்திற்கு வரும்படி தம்மை அழைத்து இருப்பதையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வங்காள தேசத்தில் மீண்டும் அமைதி திரும்புவதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் மலேசியா மேற்கொள்ளும். அமைதி முயற்சிக்கான ஒரு பகுதியாக அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகர் டாக்டர் மொஹமட் யூனுசுடன் பேசியிருக்கிறேன். குறுகிய கால வருகை மேற்கொண்டு வங்காளதேசம் செல்ல இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
மிக அதிகமான வங்காளதேச பிரஜைகள் மலேசியாவில் வாழ்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களின் பூர்வீக நாட்டின் நலனை மலேசியா மேம்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் என பிரதமர் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது எனவும் குணராஜ் தெரிவித்துள்ளார்.
