
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
படம்-முருகன்
கோலாலம்பூர், செப்.11:
செந்தூல் அருள்மிகு நாகேசுவரி அம்மன் ஆலயத்தில் ஒன்றுபட்டு வளர்ச்சிப் பணியை மேற்கொள்வோம் என்று அறிவித்து மஇகா-வும் பிகேஆரும் கைகோத்துள்ளன.
அண்மைக்காலம் வரை சலசலப்பின் உறைவிடமாக இருந்த இந்த வழிபாட்டுத்தலம், இனி துரிய வளர்ச்சியையும் குடமுழுக்கு விழாவையிம் கண்டு, செந்தூல் வட்டாரவாழ் மக்களின் சக்தி வழிபாட்டு மையமாக உருமாறும் என்ற நம்பிக்கையை மஇகா-பிகேஆர் கட்சிகளின் 2-ஆம் நிலைத் தலைவர்கள் சுல்தான் அஸ்லான் ஷா மெட்ராஸ் கஃபே உணவகத்தில் நடத்திய செய்தியாளர்க் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது.
ஒய்.டி.எல். நிறுவனத்தின் மேம்பாட்டுத் திட்டம் காரணமாக இட சிக்கலுக்கு ஆளான இந்த ஆலயத்தின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில், மஇகா-வும் பிகேஆரும் ஒரு புள்ளியில் சந்தித்தபோது முறுகல் நிலை உச்சத்தைத் தொட்டது.
இப்பொழுது, பழையவற்றை மறந்து நாட்டில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தைப் போல இந்திய சமுதாயத்திலும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்னும் சிந்தனையின் அடிப்படையில் மஇகா-வுடன் கரம்கோத்துள்ளதாக பத்துத் தொகுதி எம்பி பி.பிரபாகரன் தெரிவித்தார்.
அதற்கு ஏற்ப நில சிக்கலையும் அரசு தீர்த்து வைத்துள்ளது என்றும் பிரபாகரன் கூறினார்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் ஆலயத்தின் ஆலோசகருமான டத்தோ கே
இராமலிங்கம், பிரபாகரனின் கருத்தை வழிமொழிந்தார். மஇகா மத்திய செயலவையின் இன்னோர் உறுப்பினரும் தேசியத் தலைவரின் பிரதிநிதியுமான சிவசுப்பிரமணியம், ஆலயச் செயலர் ஹரி ஆகியோரும் இந்த செய்தியாளர்க் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
