
‘கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள, தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஆசாத் குடும்பத்தின் அரண்மனையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
மேற்காசிய நாடான சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்தவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன், 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற ஆசாத், தந்தை வழியில் எதிர்ப்பாளர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். கடந்த, 2011ல் அரசுக்கு எதிராக துவங்கிய போராட்டம், உள்நாட்டு போராக வெடித்தது. அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்தன.
இந்நிலையில், அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் ஒரு பகுதியான, எச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அமைப்பு தலைமையிலான அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின. அலெப்போ நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் சுற்றி வளைத்தன.
