
சமய நல்லிணக்க சட்டத்தை திருத்த அரசாங்கம் திட்டம் கொண்டிருக்கவில்லை என தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இந்த விவகாரத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் போதுமானதாக இருப்பதாக இன்று மேலவையில் அவர் கூறினார்.
இன மற்றும் சமய ஒற்றுமையை சீர்குழைக்கு முயலும் தரப்பினர் மீது 1948 தேச நிந்தனை சட்டம்,1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் மற்றும் 574 தண்டனை சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இருப்பினும் தூண்டுதுளை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்களை தடுக்க தேவை ஏற்பட்டால் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இன்று மேலவையில் ஆர்எஸ்என் ராயர் (பிஎச்-ஜெலுத்தோங்) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அண்மைய காலமாக நாட்டில் சமய சர்ச்சைகள் அதிகரித்து வருவதாக தமது கேள்வியில் ராயர் குறிப்பிட்டார்.
இதனிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான அறிக்கைகளை வெளியிடுபவர்களை தண்டிக்க நடப்பில் உள்ள சட்டங்கள் பொருத்தமாக இருப்பதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.
இந்த சட்டத்தின் கீழ் தடை உத்தரவை வெளியிடும் அதிகாரம் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் போலீஸ் மற்றும் உள்துறை அமைச்சு தங்களின் அதிகாரங்களை பயன்படுத்தும் என அவர் சொன்னார்.
