
தன் மகனுக்கு, மலேசியக் குடியுரிமையைக் கொடுக்க மறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி கூட்டரசு நீதிமன்றத்தில் இந்தோனேசிய மாது மனு சமர்ப்பித்தார்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி 40 வயதுடைய அம்மாது கூட்டரசு நீதிமன்றத்தில் தேசிய பதிவிலக்காவின் இயக்குநர் , அரசாங்கம் ஆகிய இரண்டையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டு மனு சமர்ப்பித்தார்.
மேலும், அம்மாதுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ. ஸ்ரீமுருகன் இந்தத் தகவலை உறுதி செய்தார்.
2000-ஆம் ஆண்டு , மலேசிய குடிமகனைத் திருமணம் செய்து கொண்ட அம்மாது 2004, 2010- ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, அவ்விரு குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இரண்டாவது மகனுக்கு 12 வயதாக இருந்தபோது, அவர் மலேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தார்.
ஆனால் மகன் தந்தையின் சாயலைக் கொண்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் கண்டறிந்த நிலையில்
மகனுக்கு அடையாள அட்டை வழங்க மறுத்தனர்.
இதனையடுத்து, இவ்வழக்கு மேலதிக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
விசாரணையின் போது, அம்மாதுவின் கணவர் அக்குழந்தை தனக்குப் பிறந்த குழந்தை இல்லை என்றும், மரபணு (டிஎன்ஏ ) பரிசோதனை செய்யவும் மறுத்துவிட்டார்.
இதனால், மகனின் பிறப்பு சான்றிதழைத் தேசிய பதிவிலக்காத் துறை மீட்டுக் கொண்டது.
விசாரணை இன்னும் முடிவடையாததால் , அடையாள அட்டை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
எனவே, தனது மகன் மலேசிய குடிமகன் என்று உறுதிப்படுத்துவதுடன் , பிறப்புச் சான்றிதழைத் திருப்பித் தரவேண்டி தேசிய பதிவிலக்காவிடம் கோரியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி, உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், மேல்முறையீட்டு நீதிமன்றம் நவம்பர் 29-ஆம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பை உறுதி செய்தது.
