
போலிஸ், தீயணைப்புப்படை அதிகாரிகள் உட்பட பொது மக்களுக்கு மஇகா இளைஞர் பிரிவின் சார்பில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. அப்பிரிவின் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை கூறினார். இஸ்லாமியர்கள் அடுத்த வாரம் நோன்பு பெருநாளை கொண்டாடவுள்ளனர். இந்நிலையில் நோன்பில் இருப்பவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. குறிப்பாக 218ஆவது போலிஸ் தினத்தை முன்னிட்டு டாங் வாங்கி போலிஸ் அதிகாரிகளுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. அதே வேளையில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் பொதுமக்களுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 350க்கும் மேற்ப்பட்ட நோன்பு கஞ்சி பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒற்றுமை தொடர்ந்து நிலை நாட்டப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் இந்த நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார். அண்மையில் நேதாஜி மண்டபத்தில் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், உதவி தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் ஒருங்கிணைப்பில் நோன்பு திறக்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
