30.7 C
Kuala Lumpur
Sunday, April 5, 2026

Vetri

செலாங்கூர் சுகாதார இயக்குநர் மீது குற்றச்சாட்டுகள்; மலேசிய சுகாதார அமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை பாதிக்கப்படுமா?

மலேசிய சுகாதார அமைச்சகத்தின் (KKM) கீழ் செயல்படும் செலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் மீது, மருத்துவ தீர்மானங்களில் நேரடி தலையீடு, இந்திய வம்சாவளி சுகாதார பணியாளர்களுக்கு எதிரான நடத்தை மற்றும் நிர்வாக அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அறிக்கைகளின் படி, செலாங்கூரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீண்டநாள் நோயாளிக்கு மருத்துவ காரணங்கள் இருந்தபோதிலும், அந்த நோயாளிக்கு மருத்துவ சான்றிதழ் (MC) வழங்க வேண்டாம் என்று ஒரு மருத்துவருக்கு இயக்குநர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை மருத்துவ நெறிமுறைகள், ரகசியம் மற்றும் மருத்துவர்களின் சுயாதீன முடிவெடுக்கும் உரிமைகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுகாதார பணியாளர்களுக்கு எதிராக பின்வரும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன:

  • கிளாங் மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய மருத்தவர்கள் குறித்து அவமதிப்பான கருத்துகள் வெளியிட்டது
  • முறையான விசாரணை இன்றி ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தியது மற்றும் பணியிடங்களில் இருந்து நீக்கம் செய்தது
  • பலமுறை புகார் அளிக்கப்பட்டபோதும் துஷ்பிரயோகமான நடத்தை தொடர்ந்து இடம்பெற்றது

இந்த விவகாரம் தொடர்பாக 2025 அக்டோபரில் ஒரு உத்தியோகபூர்வ விசாரணை நடத்தப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தத் தெளிவான முடிவும் நடவடிக்கையும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பல முறை சுகாதார அமைச்சகத்துக்கும் (KKM), பொது சேவை இயக்குநருக்கும் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், எந்தத் தீர்வும் கிடைக்காத நிலை நிலவுவதால், நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்து கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம், மலேசிய அரசுப் பணியகத்தில் உள்ள சாதியாதாரம், சிறுபான்மை பாதுகாப்பு மற்றும் சமத்துவம் போன்ற முக்கிய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. எந்தவொரு இனவெறியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அது நாட்டின் சுகாதார அமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கையை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவர்கள் தங்கள் சுயாதீன மருத்துவ முடிவுகளை நிர்வாக அழுத்தம் இன்றி எடுக்க அனுமதிக்கப்பட வேண்டும். நோயாளிகளின் நலனே முதன்மை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

இதையடுத்து, பொதுமக்கள், சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு தரப்பினரும் விரைவான, வெளிப்படையான மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தீர்க்கப்படாமல் நீடித்தால், அது சுகாதார பணியாளர்களின் நலனையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் மட்டுமல்லாமல், மலேசியாவின் பொது சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “இதைத் தொடர்ந்து நாம் எந்த திசையில் செல்ல வேண்டும்?” என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles