
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி (BN) வெற்றி பெற்றுள்ள போதிலும், அந்த முடிவுகள் மத்திய அரசின் ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான அரசியல் ஒத்துழைப்பையும், கூட்டாட்சி மட்டத்தில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வையும் தனித்தனியான விவகாரங்களாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போதைய கூட்டாட்சி அரசாங்கத்தை அமைத்துள்ள கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு, ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பே கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்தப் புரிந்துணர்வு தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, அதாவது இந்த ஆட்சிக்காலம் நிறைவடையும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் ஃபஹ்மி தெரிவித்தார்.
“ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் அர்ப்பணிப்பு மிகவும் தெளிவாக உள்ளது. எனவே, ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சூழலையும் தற்போது நாங்கள் காணவில்லை,” என்று அவர் கூறினார்.
எனவே, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவுகளை மத்திய அரசின் அரசியல் நிலைத்தன்மையுடன் நேரடியாக தொடர்புபடுத்துவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.



