
சுங்கை புலோ சிறையில் இருந்து மாற்று நடவடிக்கையின் போது, ஒரு ரிமாண்ட் கைதி தப்பிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘X’ தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், போலீஸ் லாரியில் இருந்து பல கைதிகளுடன் இறங்கிய ஒருவர், சில நொடிகளில் திடீரென ஓடிச் செல்வது காணப்படுகிறது. அவரைத் தடுக்க முயன்ற இரு போலீசார் விரட்டியபோதிலும், அவர் வேகமாக தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிய கைதி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகமது ஹசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
அவற்றில்,
- தண்டனைச் சட்டம் பிரிவு 377C (இயற்கைக்கு முரணான பாலியல் குற்றங்கள்)
- பிரிவு 392 (கொள்ளை)
- குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 – பிரிவுகள் 14(a) மற்றும் 14(d)
- குடியேற்றச் சட்டம் 1959/63 – பிரிவு 15(1)(c)
ஆகியவை அடங்கும்.
குறிப்பாக, பிரிவு 377C என்பது 18 வயதிற்கு குறைவானவர்களுடன் அல்லது அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் பாலியல் செயல்கள் தொடர்பானது. அதேசமயம், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம், குழந்தைகளின் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் சுரண்டல் குற்றங்களை உள்ளடக்கியது.
இந்த சம்பவம், சிறை பாதுகாப்பு மற்றும் கைதி மாற்று நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், தப்பிய கைதியை கைது செய்ய அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
