
தாய்லாந்தின் டன்னோக் பகுதியில் நடைபெற்ற சோங்க்ரான் கொண்டாட்டத்திலிருந்து திரும்பிய இரண்டு சகோதரர்கள், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டு கெடா தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு முகமை (NADA) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
17 மற்றும் 21 வயதுடைய இந்த இருவரும், புகிட் காயு ஹிதாம் ICQS எல்லைச் சோதனைச் சாவடியில் நடந்த சோதனையில் சிக்கினர்.
சோதனையில்,
- 21 வயதுடைய பெண் கெட்டமின், MDMA மற்றும் மெத்தாம்பெட்டமின் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது.
- அவரது சகோதரர், SPM தேர்வுக்குத் தயாராகும் மாணவர், கெட்டமின் பயன்படுத்தியதாக தெரியவந்தது.
விசாரணையில், அந்த பெண் கூறுகையில்,
“நாங்கள் குவாலா பெர்லிஸில் இருந்து மோட்டார் சைக்கிளில் டன்னோக்கிற்கு சோங்க்ரான் கொண்டாட்டத்திற்காக சென்றோம். அங்கு முதல்முறையாக போதைப்பொருளை சிகரெட் மூலம் பயன்படுத்தினோம். எல்லையில் சோதனை இருக்கும் என்று நினைக்கவில்லை,” என்றார்.
அவரது சகோதரர், நண்பர்களின் தூண்டுதலால் இந்த தவறில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.
கெடா NADA இயக்குநர் மட் ரஸீப் வான் தெரிவித்ததாவது,
இந்த சிறப்பு நடவடிக்கை சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றதாகவும், டன்னோக்கில் உள்ள பொழுதுபோக்கு மையங்களுக்கு மலேசியர்கள் அதிகம் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது:
- 25 கார்கள் மற்றும் 35 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதிக்கப்பட்டன
- மொத்தம் 47 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
- அதில் 37 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது
அதில்,
- 17 பேர் – கெட்டமின்
- 14 பேர் – MDMA
- 4 பேர் – மெத்தாம்பெட்டமின்
- 2 பேர் – THC
என்பன பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 46 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும், பெரும்பாலோர் பொழுதுபோக்கிற்காக முதன்முறையாக போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவரும் தற்போது 1983 ஆம் ஆண்டின் போதைப்பொருள் பழக்க அடிமைகள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம் பிரிவு 3(1) கீழ் கைது செய்யப்பட்டு மேலான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், வெளிநாட்டு பயணங்களில் போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் குறித்து கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
