
கிளாந்தான் மாநிலம் தும்பாட் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது கைப்பேசியை கொள்ளையடித்த 23 வயது இளைஞருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஏழு பிரம்படி தண்டனையும் விதித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தன் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொள்ளை ஆகிய இரு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, கடந்த ஜூன் 17ஆம் தேதி, கம்போங் மெஸ்ரா பலெக்பாங் பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை, அருகிலிருந்த புதர்ப்பகுதிக்குள் இழுத்துச் சென்று தாக்கியதுடன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், மரக்கட்டையை காட்டி மிரட்டி, சிறுமியின் கைப்பேசியையும் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐந்து பிரம்படி தண்டனையும், கொள்ளை குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டு பிரம்படி தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
இரு தண்டனைகளும் தொடர்ச்சியாக (consecutively) அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதால், குற்றவாளி மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது.
மேலும், சிறைவாசத்தின் போது கட்டாயமாக ஆலோசனை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை பெற வேண்டும் என்றும், சிறையிலிருந்து விடுதலையான பின்னர் மூன்று ஆண்டுகள் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



