
சரவாக் மாநிலம் மீரியில் உள்ள துடான், ஜாலான் பெர்டானா கட்டுமானத் தளத்தில் திடீரென ஏற்பட்ட இயற்கை மெத்தேன் வாயு கசிவு காரணமாக, அப்பகுதியில் நடைபெற்று வந்த அனைத்து கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கட்டுமானத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் அகழ்வாராய்ச்சி துளையிலிருந்து இயற்கை வாயு கசிவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Petros நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், கசிவு ஏற்பட்ட இடத்தில் மெத்தேன் வாயுவின் அளவு அதன் வெடிப்பு அபாய வரம்பான (Lower Explosive Limit – LEL) 100 சதவீதத்தை எட்டியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பிந்துலு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் Hazmat (Hazardous Materials) சிறப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீவிர கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்வில், வாயு கசிந்த துளையைச் சுற்றி சுமார் மூன்று மீட்டர் சுற்றளவில் மெத்தேன் வாயு பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கசிவு ஏற்பட்ட துளையை தற்காலிகமாக மூடுமாறு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



