
ஷா ஆலாம்: சிலாங்கூரின் பண்டார் புஞ்சாக் ஆலாம் பகுதியில் சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவிலான மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அருகிலுள்ள இரண்டு பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள புஞ்சாக் ஆலாம் தேசியப் பள்ளி 2 (SK Puncak Alam 2) மற்றும் எஸ்.ஆர்.ஏ. புஞ்சாக் ஆலாம் (SRA Puncak Alam) ஆகிய பள்ளிகள், குவாலா சிலாங்கூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் (PPD) உத்தரவின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் கூறுகையில், தீயை கட்டுப்படுத்தும் பணிக்காக 13 தீயணைப்பு வீரர்களும், மூன்று தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, தீ மீண்டும் பரவக்கூடிய அபாயம் இல்லை என்பதை உறுதி செய்ததாக அவர் கூறினார்.
இந்த தீ விபத்து பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பிற்பகல் 3.00 மணியளவில் மீட்பு மற்றும் அணைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தன என்று அவர் தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



