
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் மக்களின் செழிப்பையும் உறுதி செய்வதற்காக, ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ மற்றும் தேசிய முன்னணியுடனான ஒத்துழைப்பைத் தொடர தாம் தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவு எந்தவொரு அரசியல் கட்சியின் மீதான கோபம், வெறுப்பு அல்லது குற்றவுணர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல என்றும், நாட்டு மக்களின் நலன் மற்றும் மலேசியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான் நிலைத்தன்மையைத் தேர்ந்தெடுக்கிறேன். மக்களின் செழிப்பைத் தேர்ந்தெடுக்கிறேன். தேசிய முன்னணி மற்றும் அம்னோவுடன் நேரடியான ஒத்துழைப்பைத் தொடரத் தேர்ந்தெடுக்கிறேன்,” என்று அன்வார் கூறினார்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2026 கெஅடிலான் தேசிய மாநாட்டின் நிறைவுரையில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல் ஒத்துழைப்பு தொடர்பாக ஒவ்வொரு தரப்பும் தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
அம்னோ மற்றும் தேசிய முன்னணியுடனான அரசியல் ஒத்துழைப்பின் எதிர்காலம் குறித்த எந்தவொரு முடிவும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படாமல், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விவேகத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் அரசியல் ஒத்துழைப்பில் வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நிலைத்தன்மை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவையே முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.



