
மலேசியர்களைப் பாதிக்கும் இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடி உள்ளடக்கங்கள் அதிகளவில் காணப்படும் தளமாக முகநூல் (Facebook) இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இதனைச் சுட்டிக்காட்டிய அவர், மலேசியர்களைப் பொறுத்தவரை முகநூலை ஒரு ‘பாவமான தளம்’ என்று வர்ணித்தார்.
இணையவழி சூதாட்டம் தொடர்பான உள்ளடக்கங்களில் முகநூலின் பங்கு 78 விழுக்காடாக இருப்பதாக அவர் கூறினார். இதனுடன் ஒப்பிடுகையில் YouTube 18 விழுக்காடும், TikTok 4 விழுக்காடும் பதிவாகியுள்ளன.
இதனால், சூதாட்டம் தொடர்பான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் முகநூல் நிர்வாகத்திடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
மோசடி தொடர்பான உள்ளடக்கங்களிலும் 53 விழுக்காட்டுடன் முகநூலே முதலிடத்தில் இருப்பதாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து TikTok 39 விழுக்காடும், Threads 5 விழுக்காடும் பதிவாகியுள்ளன.
“மலேசியர்களுக்கு எந்தத் தளம் அதிகம் ‘பாவம்’ செய்கிறது என்று கேட்டால், இணையவழி சூதாட்டத்தைப் பொறுத்தவரை முகநூல்தான் முதலிடத்தில் உள்ளது. மோசடிகளைப் பொறுத்தவரையிலும் 53 விழுக்காட்டுடன் முகநூலே முதலிடத்தில் உள்ளது,” என்று ஃபஹ்மி தெரிவித்தார்.
இதனிடையே, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 17 வரை மொத்தம் 470,593 இணைய உள்ளடக்கங்களை நீக்குவதற்கான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட சமூக ஊடகத் தளங்களுக்கு முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அவற்றில் 436,661 உள்ளடக்கங்கள், அதாவது 93 விழுக்காடு, சம்பந்தப்பட்ட தளங்களால் நீக்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நீக்கக் கோரப்பட்ட மொத்த உள்ளடக்கங்களில் 64 விழுக்காடு இணையவழி சூதாட்டம் தொடர்பானவை என்றும், 27 விழுக்காடு மோசடி தொடர்பானவை என்றும் ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.



