
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ‘Semarak Merdeka DUN Sentosa’ நிகழ்ச்சியில் சுமார் 70 குடியிருப்பாளர் சங்கங்கள் (RA), அரசு சாரா அமைப்புகள் (NGO) மற்றும் ருக்குன் தெத்தாங்கா (KRT) பிரதிநிதிகள் கலந்து கொண்டு தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங்கை பெருமையுடன் பறக்கவிட்டனர்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களின் ஏற்பாட்டில் ஜாலூர் கெமிலாங் கொடிகள் விநியோகம் மற்றும் ‘Drive-Through’ நிகழ்ச்சியும் இதன்போது நடைபெற்றது.
நாட்டின் மீதான அன்பையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் பங்கேற்பாளர்கள் ஜாலூர் கெமிலாங் கொடிகளை ஏந்தியதுடன், ‘Jalur Gemilang’ பாடல் ஒலிக்கப்பட்டபோது நிகழ்வு மேலும் உற்சாகமடைந்தது.
“மலேசியா நம் அனைவருக்கும் சொந்தமானது” என்ற உணர்வுடன் செந்தோசா சமூகத்தை ஒன்றிணைத்து, சுதந்திர தின உணர்வையும் தேசப்பற்றையும் மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்ததாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓம்ஸ் தியாகராஜன், கிள்ளான் மாவட்ட தகவல் துறை அதிகாரி, கிள்ளான் மாவட்ட ஒற்றுமைத்துறை அதிகாரி மற்றும் கிள்ளான் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து RA, KRT, NGO அமைப்புகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் செந்தோசா மக்களுக்கும் டாக்டர் குணராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“ஜாலூர் கெமிலாங்கை பெருமையுடன் தொடர்ந்து பறக்கவிடுவோம். சுதந்திர தின உணர்வை மேலும் வலுப்படுத்துவோம். Malaysia MADANI – Kesejahteraan Dinikmati,” என்று டாக்டர் குணராஜ் தனது பதிவில் குறிப்பிட்டார்.



