
சிறப்பு எச்சரிக்கை விளக்குகள் அல்லது சைரன்களைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு, சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் செல்லவோ, வேக வரம்பை மீறவோ அல்லது மற்ற சாலைப் பயனாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவோ தானாகவே விலக்கு அளிக்கப்படுவதில்லை என்று புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹஸ்புல்லா அலி இதனைத் தெரிவித்தார்.
வாகனங்களில் சிறப்பு எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்துவது 1959ஆம் ஆண்டு மோட்டார் வாகன விதிகளின் ஆறாவது அட்டவணை, விதி 24B-க்கு உட்பட்டது என்று அவர் விளக்கினார்.
சிறப்பு எச்சரிக்கை விளக்குகள் அல்லது சைரன்கள் இயக்கப்பட்டிருந்தாலும், போக்குவரத்து சமிக்ஞையை அணுகும் எந்தவொரு வாகனமும் தனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு சாலை நிலைமை முழுமையாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
குறிப்பாக, பணியில் ஈடுபட்டிருக்கும் அமலாக்க மற்றும் அவசரகால வாகனங்களும் சந்திப்புகள் அல்லது போக்குவரத்து சமிக்ஞைகளைக் கடக்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சைரன் அல்லது சிறப்பு விளக்குகளைப் பயன்படுத்துவது மற்ற சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை புறக்கணிப்பதற்கான அனுமதி அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் சாலைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் முஹம்மது ஹஸ்புல்லா தெரிவித்தார்.



