
நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களை அர்ப்பணித்த வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், செந்தோசா சட்டமன்றத் தொகுதி வீரர்கள் தினக் கொண்டாட்டம் (Sambutan Hari Pahlawan DUN Sentosa) சிறப்பாக நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முன்னெடுப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், முன்னாள் வீரர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் செந்தோசா மக்கள் கலந்து கொண்டனர்.
“Semarak Merdeka, Kenang Pahlawan, Kibarkan Jalur Gemilang” என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, நாட்டிற்காக சேவையாற்றிய வீரர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, அவர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக அமைந்தது.
குறிப்பாக, நாட்டிற்காக சேவையாற்றிய வீரர்கள் தங்களது அனுபவங்களையும் போராட்டக் கதைகளையும் நேரடியாகப் பகிர்ந்து கொண்டது நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது.

தங்களது சேவையும் தியாகமும் சமூகத்தால் நினைவுகூரப்பட்டு அங்கீகரிக்கப்படுவது குறித்து வீரர்கள் மகிழ்ச்சியடைந்ததாக டாக்டர் குணராஜ் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
“நமது வீரர்களின் சேவையை ஒருபோதும் மறக்க முடியாது. அவர்களின் தியாகமும் தேசப்பற்றும் இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைகளுக்கும் தொடர்ந்து உத்வேகமாக அமையும்,” என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், சமூக அமைப்புகள் மற்றும் செந்தோசா மக்களுக்கும் டாக்டர் குணராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார்.
அதேவேளை, சுதந்திரத்தின் மதிப்பையும் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் பங்களிப்பையும் இளைய தலைமுறையினரிடம் தொடர்ந்து எடுத்துச் சென்று தேசப்பற்று உணர்வை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“வீரர்களை நினைவுகூர்வோம்; அவர்களின் தியாகத்தை மதிப்போம்; தேசப்பற்று உணர்வை தொடர்ந்து வளர்ப்போம்,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.



