
பினாங்கு மாநிலத்தில் மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொது நடவடிக்கைப் படையைச் (PGA) சேர்ந்த 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை தாசேக் கெலுகோர் (Tasek Gelugor) பகுதியில் செயல்பட்டு வரும் மின்னணுக் கழிவு (e-waste) மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான பதவிகளில் உள்ளவர்கள் என்றும், அவர்கள் கெடா, குளீமில் உள்ள PGA 2-வது பட்டாலியனில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் துணை இயக்குநர் முஹம்மது அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீதான விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாநில காவல்துறை விசாரணை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட காவலர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



