
அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தபோங் ஹாஜி வாரியம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க காவல்துறை ஐந்து விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
இந்தத் தகவலை புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் வகையில் இதுவரை 127 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் தகவல்களைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட சாட்சிகள் விரைவில் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் 1965ஆம் ஆண்டு தபோங் ஹாஜி சட்டம், 1965ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் மற்றும் 2001ஆம் ஆண்டு கள்ளப்பண பரிமாற்றத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ருஸ்டி கூறினார்.
விசாரணையின் அனைத்து அம்சங்களும் எந்தவித தலையீடும் இன்றி சுயாதீனமாகவும், நேர்மையாகவும், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படுவதை காவல்துறை உறுதி செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.
தபோங் ஹாஜி தொடர்பான RCI அறிக்கையில் எழுப்பப்பட்ட விவகாரங்கள் குறித்து காவல்துறையின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



