
சரவாக் மாநிலத்தில் புகைமூட்டத்தின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், 10 இடங்களில் காற்றுத் தரக் குறியீடு (API/IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
சரவாக்கின் செரியான் பகுதியில் அதிகபட்சமாக 191 காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
அதேவேளை, கூச்சிங்கில் 181, சமரஹானில் 178, ஸ்ரீ அமானில் 174 மற்றும் சரிகேயில் 171 என்ற அளவில் காற்றுத் தரக் குறியீடு பதிவாகி, ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
தீபகற்ப மலேசியாவிலும் சில பகுதிகளில் காற்றுத் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. மலாக்காவின் புக்கிட் ரம்பாய் பகுதியில் API 140 ஆகப் பதிவாகியுள்ளது.
முன்னதாக, சரவாக்கில் புகைமூட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாநிலத்தில் செயல்பட்டு வந்த 591 பள்ளிகள் மூடப்படுவதாக மாநில கல்வித் துறை நேற்று அறிவித்திருந்தது.
காற்றுத் தரக் குறியீட்டின்படி, 0 முதல் 50 வரை நல்ல நிலை, 51 முதல் 100 வரை மிதமான நிலை, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற நிலை என வகைப்படுத்தப்படுகிறது.
அதேவேளை, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற நிலையாகவும், 300-க்கும் அதிகமான அளவு அபாயகரமானதாகவும் வகைப்படுத்தப்படுகிறது.
சரவாக்கின் பல பகுதிகளில் API தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால், பொதுமக்கள் காற்றுத் தர நிலவரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனித்து செயல்படுவது அவசியமாகும்.



