
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள அபு அல்-துஹூர் வான்வழித் தளத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கூட்டாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தி, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுடன் துருக்கி, அல்ஜீரியா, இந்தோனேசியா, ஜோர்டன், லெபனான், மௌரித்தேனியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
சிரியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் ஒற்றுமையை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதலைக் கருதுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிப்பதுடன், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் பாதிக்கும் என்று அந்த நாடுகள் எச்சரித்துள்ளன.
மேலும், சிரியாவுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தடுப்பதற்கு சர்வதேச சமூகம் உறுதியான, தெளிவான மற்றும் கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிரியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சம்பந்தப்பட்ட நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.



