
கடந்த 2009 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி செய்ததைப் போல, கெளரவமாகப் பதவி விலகுமாறு பிரதமர் மொகிதீன் யாசினைப் புத்ரா கட்சியின் தலைவர் இப்ராஹிம் அலி கேட்டுக் கொண்டுள்ளார்.
அம்னோ அவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதை அடுத்து மொகிதீன் யாசின் தனது பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவர் பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்று இப்ராஹிம் அலி கூறினார்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள், பெயர் கூட வரலாற்றில் ஏற்கனவே 8ஆவது பிரதமராக வந்து விட்டது. பிறகென்ன?
மொகிதீன் யாசின் பெரிய மனம் கொண்டவராகவும், தேசியவாதியாகவும் இருந்தால், அரசியல் நெருக்கடி, அரசியலமைப்பு நெருக்கடி, மக்கள் மதிப்பீடுகளின் நெருக்கடி ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் மாட்சிமை தங்கியப் பேரரசர் அடுத்த முடிவெடுப்பதற்கும் வழிவிட்டு, அவர் மரியாதையுடன் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார்.



