
உலோக மறுசுழற்சி துறை நேற்று முதல் இயங்கலாம் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் விடுத்துள்ள அறிவிப்புக்கு மாறாக அவ்வாறு இயங்குவோர் மீது சம்மன் விதிக்கப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. கெடா மாநிலத்தில் கடைகளை திறக்க மாவட்ட மன்றம் அனுமதிக்கவில்லை என மாநிலத் தலைவர் சரவணன் மூலமாகத் தகவல் கிடைத்துள்ளது. மலேசிய இந்திய மறுசுழற்சி வர்த்தகம் எவ்வித சுணக்கமும் இன்றி தொடர்வதற்கு மனிதவள அமைச்சு துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மலேசிய உலோக மறுசுழற்சி சங்கம் கேட்டுக்கொள்கிறது. டத்தோஸ்ரீ எம்.சரவணனின் ஆக்கபூர்வமான முயற்சிக்கு சங்கம் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அமைச்சு மூலமாக அவர் எடுத்துள்ள நடவடிக்கையானது உலோக மறுசுழற்சி வர்த்தகத்திற்கு உயிரோட்டத்தை வழங்கியுள்ளது. அதனை நாம் வரவேற்கிறோம். மாவட்ட மன்ற அமலாக்க அதிகாரிகள் நாட்டின் நடப்பு சூழல் குறித்து அறிந்திடாத தன்மை காரணமாக சம்மன் விதிப்பு வரலாம் என்பதை சங்கம் வரவேற்கவில்லை. இப்போது உலோக மறுசுழற்சி வியாபாரிகள் அபராதப் பிரச்சினையை எதிர்நோக்கி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே,இவ்விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை சங்கம் கேட்டுக் கொள்கிறது என்று மலேசிய உலோக மறுசுழற்சி சங்கம் (Perkesa) தலைவர் டத்தோ ஜி.குமார் அம்மான் குறிப்பிட்டுள்ளார்.
