
Sekolah Berasrama Penuh என்றழைக்கப்படும் தங்கும் விடுதி பள்ளிகளில் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் சேர்ந்து கற்க வாய்ப்பளிக்க வேண்டிய நேரம் இது என்று பக்கத்ததான் ஹரப்பான் தெரிவித்துள்ளது. Sekolah Berasrama Penuh பள்ளிகள் கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து மலேசியாவில் செயல்படுகின்றன. புறநகர் மாணவர்களுக்கு நிலையான மற்றும் உகந்த பள்ளிச் சூழலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முதலில் இப்பள்ளித் திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் இந்த பள்ளிகள் நிறுவப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இன்று, சபா மற்றும் சரவாக்கில் உள்ள 5 முழு தங்கும் விடுதி பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் ஒரு பள்ளிக்குச் சராசரியாக சுமார் 800 மாணவர்கள் கொண்ட 69 பள்ளிகளில் 55,000க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கிறார்கள். படிவம் 1 முதல் படிவம் 5 வரையிலான இடைநிலைக்கல்வியில் மட்டுமே இப்பிரிவு கவனம் செலுத்துகிறது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, தங்கும் விடுதி பள்ளிகளில் ஏன் தாய்மொழிப் பள்ளிகளிலும் (SJK) தேசிய சமயப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்பதில்லை? தாய்மொழிப் பள்ளிகள் கல்வி அமைச்சால் நிர்வகிக்கப்படும் பாடத்திட்டத்திற்கு ஒத்த உள்ளடக்கத்தைக் கொண்ட பள்ளிகளாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முழு உறைவிடப் பள்ளிகளில் இம்மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் கொள்கையானது நாடு முழுவதும் உள்ள 1200-க்கும் மேற்பட்ட தேசிய வகை சீனப்பள்ளியிலும் (SJKC) 500-க்கும் மேற்பட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளியிலும் (SJKT) படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பில் பாகுபாடு காட்டுவதாக அமைந்துள்ளது. ‘மலேசிய குடும்பம்’ மற்றும் அனைவரின் நலன்களையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ள, மலேசிய பிரதமரின் கொள்கையை நிலைநாட்ட கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிடம் இந்த அவசர வேண்டுகோளைச் சமர்ப்பிப்பதாகக் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார், தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஹாசன் மற்றும் கோத்தா பெலூட் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்னரைசா முனிரா ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



