
பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சியில் மலாக்கா மாநிலத்தில் இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு 1.8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 61 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த நிலத்திற்கு ஆட்சிக்குழு அங்கீகாரம் பெறப்பட்டு கடிதமும் கிடைத்தது. மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நான் இருந்தபோது இந்த நிலத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுத் தந்தேன் என்று காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தெரிவித்தார். ஆனால் இப்போது பெரிக்கத்தான் நேஷனல் புதிய ஆட்சியில் அந்த நிலத்தை வழங்கமுடியாது என்று மலாக்கா மாநில அரசாங்கம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று சாமிநாதன் தெரிவித்தார். பக்கத்ததான் ஹரப்பான் ஆட்சியில் மலாக்கா மாநில அரசாங்கத்தின் அங்கீகாரத்தோடு அந்த நிலம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலாக்கா சட்டமன்ற கூட்டத்தில் இந்த நிலம் குறித்து கேள்வியை எழுப்பினேன். நிலம் அளவு எடுக்கப்படுவதாக பதில் கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த நிலத்தை மலாக்கா மாநில அரசாங்கம் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலம் இந்துக்கள் ஈமச்சடங்கு செய்வதற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இது தொடர்பில் மலாக்கா மாநில அரசு மற்றும் அலோர் காஜா மாவட்ட நில அலுவலகத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார். இந்த வழக்கு இம்மாதம் 27 ஆம் தேதி மலாக்கா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அவர் சொன்னார்.
