
சமூக உருமாற்றத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. நாட்டின் இளைய சமூதாயத்தை விட்டு விட்டு எந்த முன்னேர்றத்தையும் கொண்டு வந்து விட முடியாது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். பிரிக்ஃபீல்ட்ஸ் கலா மண்படபத்தில் நடைபெற்ற மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 55வது பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்த குணராஜ் அவ்வாறு இவ்வாறு கூறினார். இன்றைய இளைஞர்களே சமூதாயத்தின் எதிர்காலம். இளைஞர்களின் பங்களிப்பும் மாறுபட்ட அணுகுமுறையும் நாட்டின் வளர்ச்சிப் போக்கினை தீர்மானிப்பதற்குப் பேருதவியாக இருந்ததால் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாக கருதப்பட்டனர். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, தைப்பூசத்தின் போது பத்துமலைத் திருத்தலத்தில் THAIPUSAM TASK FORCE எனும் பணிப்படை உருவாக்கப்பட்டது. அதன் பலன் நாம் யாவரும் அறிவோம். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தைக் கொண்டு வந்து சில சமூக சீர்கேடுகளும் குறைந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்க அடிப்படையை நாம் உறுதியாய் அமைக்க வேண்டும். அது தான் தமிழ்ப்பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புதல். அந்தப் பருவத்திலிருந்தே அவர்களுக்குப் பலதரப்பட்ட வழிகளை வகுத்து முன்னேற்றப் பாதைக்குச் செல்ல வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
