
மைக்கா ஹோல்டிங்ஸ் முதல் இன்று மித்ரா வரை ஏழை இந்திய சமுதாயத்திற்கு எந்தவொரு நன்மையும் இல்லை. இவைகள் அனைத்தும் ஏழை இந்தியா சமுதாயத்திற்கு ஒரு சாபக்கேடாக இருக்கிறது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சுட்டிக்காட்டினார். 1980 ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தை பொருளாதாரத்தில் உயர்த்தப் போகிறது என்று கூறி அப்போதைய மஇகா தலைவர் துன் டாக்டர் சாமிவேலு மைக்கா ஹோல்டிங்ஸ் ஆரம்பித்தார். இதை நம்பி ஏழை இந்திய சமுதாயம் 10 கோடி வெள்ளியை வழங்கியது. சரியான நிர்வாகம் இல்லாததால் கடைசியில் மைக்கா ஹோல்டிங்ஸ் குட்டிச்சுவரானது. அதன் பின்னர் செடிக் வந்தது. இப்போது மித்ரா இருக்கிறது. செடிக் மற்றும் மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவில்லை. பெரும்பாலான மித்ரா நிதி ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மைக்கா ஹோல்டிங்ஸ் முதல் இன்று மித்ரா வரை ஏழை இந்திய சமுதாயம் வஞ்சிக்கப்பட்டு உள்ளது என்று டாக்டர் இராமசாமி மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
