
கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா, தென்னமரத் தோட்டத்தைச் சேர்ந்த தஞ்சோங் பாசிர் நிலக் குத்தகை தொடர்பான பிரச்சனை 2021 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் எழுப்பப்பட்டது. இந்த நிலக் குத்தகை தொடர்பில் Syarikat Biasan Suria Sdn Bhd மற்றும் Syarikat Trilion Sdn Bhd ஆகிய இரு நிறுவனங்கள் ஒருசேர ஈடுபட்டுள்ளதன் தொடர்பில் மாநில அரசு தலையிட வேண்டும் என்று தென்னமரத் தோட்டக் குடியேற்றக்காரர் குழு கோரிக்கை வைத்தது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் 2021 மே 3-இல் ஐவர் கொண்ட உள் விசாரணைக் குழுவில் சிலாங்கூர் மாநில செயலகத்தைச் சேர்ந்த ஒருமைப்பாட்டுப் பிரிவு மற்றும் உட்கணக்காய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, 2021 நவம்பர் 10-இல் கூடிய சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கைக் குழுவின்(MTES) பார்வைக்கு இந்த விஷயம் கொண்டு வரப்பட்டது; தொடர்ந்து 2021 நவம்பர் 17-இல் கூடிய மாநில ஆட்சிமன்றக் குழுவிலும் இதுகுரித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கீழ்க்கண்ட தீர்மானங்கள் வரையப்பட்டன: 1. சம்பந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட 96.4 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ய மாநில அரசு ஒப்புக் கொண்டது. அதேவேளை, விவாசாயத்திற்கும் கால்நடை பராமரிப்பிற்கும் வேறு இடத்தில் குத்தகை அளிப்பது என்றும் முடிவானது. 2. சம்பந்தப்பட்ட நிலம் மாநில விவசாய மேம்பாட்டு வாரியத்திடம்(PKPS) 21 ஆண்டு குத்தகைக்கு விடப்படும் வேளையில், இந்த வாரியம் சுமார் 400 குடியேற்றக்காரர்களுக்கும் அந்த நிலத்தைப் பகிர்ந்து அளிக்கும். மாநில விவசாய மேம்பாட்டு வாரியத்திற்கும் குடியேற்றக் குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவாக மாநில விவசாய மேம்பாட்டு வாரியத்தில் குத்தகைதாரர்களாக பதிந்து கொள்ள குடியேற்றக்காரர்கள் ஒப்புக்கொண்டனர். அதேவேளை, 96.4 ஏக்கர் நிலம் சமபந்தப்பட்ட இந்த விவகாரம், மாநில விவசாய மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான இதேப் பகுதியில் உள்ள 795.76 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வுகாண உதவியது. மொத்தத்தில் தென்ன மரத் தோட்டத்தில் குடியேற்றக்காரர்கள் சம்பந்தப்ப்ட்ட 892.16 ஏக்கர் நிலத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
