
மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகத்தின் எம்டெக் நிர்வாக இயக்குநராக இஸானா சாலே நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பி வருகின்றனர். ஆனால், இவ்விவகாரம் குறித்து தொடர்பு பல்லூடக அமைச்சு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்காதது ஏன் என்று வங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ வினவினார். இந்த விவகாரம் எம்டெக் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் நேர்மையை மட்டுமன்றி மலேசிய இலக்கவியல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள இந்த அரசு சார்பு நிறுவனத்தின் நேர்மையையும் உட்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும்படி வங்சா மாஜூ வாக்காளர்கள் தம்மை வலியுறுத்தியதாக மக்களவையில் விவாதத்தின்போது அவர் குறிப்பிட்டார். என்எஃப்சி எனப்படும் தேசிய கால்நடை கார்பரேஷனின் 250 மில்லியன் வெள்ளி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் இரு வீட்டு கடன்களைச் செலுத்தத் தவறியதற்காக சிங்கப்பூர் மேபேங்கின் வழக்கையும் எதிர்நோக்கியுள்ள ஒருவரை எம்டெக்கில் நியமனம் செய்தது குறித்த பல தரப்பினரின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் கூற மறுத்து வருவதை யீ கியூ சாடினார்.
