
கடுமையான எஸ்ஓபி விதிமுறைகளை பின்பற்றி பினாங்கு மாநில தைப்பூசத்தில் தங்க ரதம் ஊர்வலம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பினாங்கு மாநில துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி சூளூரைத்தார். தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை இப்போது அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள். ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா ரத ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்கிறார். ஆனால் பிரதமரிடம் இது தொடர்பில் பேசுவேன் என்று அமைச்சர் சரவணன் கூறுகிறார். இந்த அரசியல் நாடகத்தை மக்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார்கள் என்று டாக்டர் இராமசாமி ஏஎஸ்டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். ஒருமுறை கடைசி நேரத்தில் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். ஆனால் இம்முறை எங்களை ஏமாற்ற முடியாது. வரும் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு தங்க ரத ஊர்வலம் எஸ்ஓபி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். இம்முறை திட்டமிட்டபடி தங்க ரத ஊர்வலம் நடைபெறும் என்று அவர் உறுதியாக குறிப்பிட்டார்.
