
மியான்மரில் வடமேற்கே சகெயிங் கிராமத்தில் புகுந்த ராணுவத்தினர், 11 பேரின் கை, கால்களை கட்டி உயிரோடு எரித்த சம்பவம் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஆங் சான் சூகீயின் ஆளுங்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என கூறி, நடப்பு ஆண்டில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. சூகீ உள்ளிட்ட தலைவர்களை வீட்டு சிறையில் வைத்து உள்ளது. இதற்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் 11 பேரை கைது செய்த ராணுவத்தினர், அவர்களின் கை, கால்களை கட்டி வட்டமாக நிற்க வைத்து தீ வைத்து எரித்துள்ளனர். இதில், 11 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகளாக ஆனார்கள் என்று நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தி வருகிறது. மேலும் அமெரிக்கா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
