
நாட்டை உலுக்கிய வெள்ள கோரத்தாண்டவத்தில் சிக்கிக் கொண்ட மக்களை இனம், மதம், நிறம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவி வரும் காட்சிகள் பார்த்து மெய்சிலிர்த்து போனதாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிக உருக்கத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கஷ்டத்திலும், இன மத வேறுபாடின்றி ஒருவருகொருவர் உதவிக் கொள்ளும் மனப்பான்மை மலேசியர்களிடையே வேரூன்றி இருக்கின்றது என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. வெள்ளத்தில், எந்தவொரு வேறுபாடுகள் இன்றி களத்தில் இறங்கி உதவி வரும் மலேசியர்கள் குறிப்பாக இந்திய இளைஞர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. அந்த வகையில், கிள்ளானில் சில இந்திய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசலை கழுவும் பணியில் ஈடுபட்டிருந்த காணொளி முகநூலில் அதிகம் பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
