
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தின் போக்கை பொதுமக்கள் தொடர்ந்து கடுமையாக சாடி வரும் வேளையில் பகாங் மெந்தகாப் மக்களும் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். வெள்ளத்தில் எங்களது உடமைகள் எல்லாம் பாழாய் போய்விட்டது. கட்டிய துணிமணிகளுடன் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இவ்வேளையில் பகாங் மாநில அரசாங்கம் வந்தது. பகாங் மந்திரி பெசாரும் வந்தார். எங்களைப் பார்த்து கைகளை மட்டுமே அசைத்தார்கள். அவர்கள் தங்கள் கார்களில் இருந்து கூட இறங்கி வெளியே வந்து ஆறுதல் கூட கூறவில்லை என்று பாதிக்கபட்ட மக்கள் பெரும் வேதனையோடு தெரிவித்தனர். தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியது மக்கள் தெரிவித்தனர். பெந்தோங் பகுதியும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கெத்தாரி ஜசெக சட்டமன்ற உறுப்பினர் யோங் சைபுரா விரைவாக களத்தில் இறங்கி எங்களுக்கு உதவி புரிந்தார். எங்களுக்கு தெரிந்த வரை ராரா என்றழைக்கப்படும் யோங் சைபுரா பல உதவிகளை புரிந்து எங்களோடு இருந்தார். அரசு நிறுவனங்கள் விட பல தொண்டுழிய இயக்கங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை புரிந்தது. அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
